அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டம்

கோவை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவப் படையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியாக போராட்டம் நடத்திய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். 

சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைகூட கைப்பற்ற முடியாத திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற முயற்சித்து வருகிறது.

இதற்காக, சென்னை, கரூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து ரவுடிகளை வரவழைப்பது, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது என திமுகவின் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அதிமுக அம்பலப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலையில் மக்கள் தேர்தலை சந்திப்பதாகவும், நகர்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்றும் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.

மேலும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த திமுகவினரை வெளியேற்றியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட திமுகவினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 

ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், கே.ஆர்.ஜெயராமன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ-க்களை, காவல்துறையினர் குண்டுக்காட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

Exit mobile version