அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இன்று முதல் சுற்றுப்பயணம்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஒன்பது மாவட்டங்களில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில், தேர்தலுக்கான பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார்.

அதன்படி, சேலத்திலிருந்து புறப்படும் இணை ஒருங்கிணைப்பாளர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தொடர்ந்து, நாளை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சனிக்கிழமை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், திங்கட்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கழக நிர்வாகிகளை சந்தித்து, ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

Exit mobile version