வெற்றிக்காக தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள்

அதிமுக வெற்றிக்காக மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்ற உத்தியுடன் உழைக்கவேண்டும் என்று தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள மடலில், நாம் அமைத்திருக்கும் மெகா கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வென்றுகாட்டும் என்பது நிதர்சனமான உண்மை என்று தெரிவித்துள்ளனர்

எதிர்க்கட்சிகள் கருத்து கணிப்பு என்னும் பெயரில் வாக்காளர்களையும், பொதுமக்களையும் திசை திருப்புவதாக கூறியுள்ள அதிமுக தலைமை, அதிமுக தொண்டர்களின் எழுச்சியை தடுத்து, அவர்களிடையே ஒரு மனச்சோர்வை உருவாக்கிடும் உத்தியோடு சதியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டியுள்ளது.

“கோல் அடிக்க முடியாத கோழை ஆள் அடிப்பான்” என்பது போல எதிர்க்கட்சிகளின் நிலை உள்ளது என்று கூறியுள்ள அதிமுக தலைமை, மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்ற உத்தியுடன் தொண்டர்கள் உழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

40 மக்களவை தொகுதிகளிலும், இம்மி அளவும் குறையாத வகையில் இடைத்தேர்தலிலும் வெற்றியை ஒருசேர வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அதிமுக தலைமை, மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு வெற்றியை காணிக்கையாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது

Exit mobile version