அஇஅதிமுக பொன்விழா ஆண்டு கோலாகல கொண்டாட்டம்…

அண்ணா திமுக பொன்விழா ஆண்டையொட்டி, மாநிலம் முழுவதும், அண்ணா திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சிலைகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

அண்ணா திமுக பொன்விழா ஆண்டை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் எழுச்சி மிகு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

ஏராளமான அண்ணா திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சி அலுவலகத்திற்கு முன் கூடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

பின்னர், தலைமை அலுவலகத்தில் உள்ள, அண்ணா திமுக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, 50ஆம் ஆண்டு பொன்விழாவை போற்றும் விதமாக, பொன்விழா மலரையும் அவர்கள் வெளியிட்டனர். கழக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பொன்விழா மலரை பெற்றுக்கொண்டார்.

 

பின்னர், கழக கொடியினை ஏற்றி வைத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

 

இதனைத் தொடர்ந்து, ஏழை, ஏளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வழங்கினர்.

பொன்விழா ஆண்டை போற்றும் விதமாக, பொன்விழா இசைத்தட்டினையும் அவர்கள் வெளியிட்டனர்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் மகத்தான சாதனைகளை சிறப்பிக்கும் வகையில், கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், பேராசிரியர், முனைவருமான கலைப்புனிதன் எழுதிய “புரட்சித் தலைவி அம்மா புனித காவியம்” என்ற நூலையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடங்கி வைத்தனர்.

இதே போல், அனைத்து மாவட்டங்களிலும், அண்ணா திமுக சார்பாக பொன்விழா கொண்டாட்டங்கள் களைகட்டின.

மறைந்த முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகள் மற்ரும் படங்களுக்கு அண்ணா திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Exit mobile version