இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகின்றனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று காலை அறிவிக்கப்படுவார்கள் என்றார். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version