உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வாங்கி செல்லும் அதிமுகவினர்

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடங்கியதை அடுத்து திருச்சி மாவட்டத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் அதிமுகவில் தொடங்கியதை அடுத்து, பல்வேறு பகுதிகளில் விருப்ப மனுக்களை பெற ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, திருவரம்பூர், மணப்பாறை, துறையூர் ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகளிலிருந்து போட்டியிட விருப்ப மனு பெற திரளானோர் வந்திருந்தனர். மாவட்ட கழக செயலாளர் ரத்தினவேல், தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான சிவபதி ஆகியோர் படிவத்தினை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மனுக்களை பெற்றுக் கொண்டோர், படிவங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட, ஒன்றிய கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினர்.

இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. அதிமுகவின் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கினர். ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

Exit mobile version