”திமுகவின் கனவு கானல்நீராகும்” -சேலம் மாவட்ட அண்ணா திமுக பொன்விழா கொண்டாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில், திமுக அரசு மெகா பொய் பேசி வருவதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா திமுக பொன்விழா ஆண்டையொட்டி, சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையம் முன்பு உள்ள மறைந்த முதலமைச்சர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுக கொடியை ஏற்றிவைத்து 50 நபர்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், மக்களுக்கான மாபெரும் திட்டங்களை தீட்டியதும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றியதும் அதிமுக அரசு மட்டுமே என்று பெருமிதம் தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசு ஜனநாயக முறைப்படி நடத்தவில்லை என்றும், வெற்றி பெற்றவர்களையும் தோல்வி என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததாகவும் குற்றம்சாட்டினார். அதிமுகவை கலைத்துவிடலாம் என்ற திமுகவின் கனவு கானல்நீரானதாக விமர்சித்த அவர், எந்த காலத்திலும் அண்ணா திமுகவை வீழ்த்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு ரத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைகூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று விமர்சித்தார்.

5 மாத ஆட்சியில் மக்களுக்கு செய்த ஒரு திட்டத்தையாவது திமுகவால் கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் திமுக அரசு மெகா பொய் பேசி வருவதாகவும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

 

மேற்கண்ட நிகழ்ச்சியில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதை விரிவாக காண

⬇⬇⬇                                                                                                                                ⬇⬇⬇

Exit mobile version