“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

கொரோனா களப்பணியாளர்களை நீக்கி, தாங்கள் கூறும் நபர்களை பணியமர்த்துமாறு மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது, அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பான அறிக்கையில்,  அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்க வேண்டும், அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என பேரறிஞர் அண்ணா தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ள ஒ.பன்னீர்செல்வம், அரசுப் பணியில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்கு முற்றிலும் முரணாக திமுகவினரின் செயல்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய்த்துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருவதால், சென்னையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அடையாறில், கொரோனா களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக தாங்கள் கூறும் நபர்களை பணியில் அமர்த்தவேண்டும் என திமுகவினர் மிரட்டியதாகவும், இதற்கு அதிகாரிகள், கட்சியின் பரிந்துரையின் பேரில் களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்றும், திறம்பட பணியாற்றுபவர்களை மாற்றினால் நோய் தடுப்பு பணியில் தொய்வு ஏற்படும் என தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடவடிக்கையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைபிடித்தால், கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொய்வின்றி, தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்வதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version