திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் நடத்தும் அலுவலர் – அதிமுக, பாஜக தர்ணா!

சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் தெரிவித்து அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயிரம் விளக்கு, சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், கொரோனா பாதித்தவர்களுக்கான தபால் ஒட்டு பதிவு செய்ய வேண்டிய நடைமுறை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திமுகவினருக்கு மட்டும் தபால் ஓட்டளிக்கும் நபர்களின் பெயர் பட்டியலை முன்கூட்டியே கொடுத்து விட்டதாக கூறி அதிமுக கூட்டணி கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் பிரதிநிதிகளிடம் ஒப்புதல் பெறாமல் இரண்டு குழுக்கள் தபால் வாக்கு சேகரிக்க சென்று விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

 

Exit mobile version