அ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா – முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து!

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்மும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. என்னும் பேரியக்கம், 48 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்து 49ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையத்தில், அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Exit mobile version