வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிய வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் மும்பை தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் நிரவ் மோடி, அவரது மனைவி அமி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் நிரவ் மோடி வங்கியில் பணத்தை கையாண்ட விதம் குறித்தும் இதில் கூறப்பட்டுள்ளது. தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய ஆதாரங்களையும், குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version