ரூ.1 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை – நடிகர் விஜய்

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தாக்கல் செய்த வரி விலக்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்,

இந்த மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பு முன்வைத்த வாதத்தில், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை.

நீதிமன்றத்தை நாடியதற்காக அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மற்றவர்களைப் போல நடிகர்களுக்கும் நீதிமன்றத்தை நாட முழு உரிமை உள்ளது.

மற்றவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்காத நிலையில், தன்னை மட்டும் விமர்சித்தது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு  பின், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பான ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தது

இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரூ 1 லட்சத்தை கொரோனா நிதிக்கு ஏன் கொடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, கொரோனா நிவாரண நிதியாக அரசிடம் ரூ.25 லட்சம் ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், சொகுசு கார் வழக்கில் அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version