தமிழக அரசால் சேலத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய பேருந்துகள் அதன் வழித்தடத்தில் இயக்கி வைக்கப்பட்டன. பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் 158 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. இந்த பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சேலம் கோட்டத்திற்கு 20 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இருபது பேருந்துகளும் அதன் வழித்தடத்தில் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளுக்கு பூஜைகள் போடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து வைத்து பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கி வைத்தார். இந்த பேருந்துகள் சேலத்தில் இருந்து சிவகாசி, சென்னை, கோவை, ஈரோடு பழனி காஞ்சிபுரம் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயங்கும்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்கனவே சேலம் கோட்டத்தில் 246 புதிய பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேலும் 20 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.