அப்துல்கலாம் 88 வது பிறந்த நாள்: குடும்பத்தினர், உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

ஏவுகணை நாயகன் என போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்நிலையில் உலக அமைதிக்கான சான்றிதழை அப்துல் கலாமிற்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழங்கினர், கலாமின் சகோதரர், இதை பெற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலாமின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தங்கள் மண்ணில் பிறந்த மாமனிதர் அப்துல் கலாமிற்கு, பிறந்த தினத்தில் மரியாதை செலுத்துவதை பெருமையாக கருதுவதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

Exit mobile version