திருப்பூர் அருகே வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிகேட்ட இளைஞர்க்கு அரிவாள் வெட்டு!!!

திருப்பூர் அருகே வாகனத்தை வேகமாக ஓட்டி வந்ததை தட்டிக் கேட்டதற்காக, இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாளையக்காடு அருகில் உள்ள சூர்யா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது மளிகை கடை உள்ள பகுதியில் சிறுவர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த ராஜேஷ் அந்த சிறுவர்களை ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் குழந்தைகள் அதிகம் விளையாடும் பகுதி இது என அதட்டியதுடன், இனிமேல் இப்படி வேகமாக செல்லக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். அப்போது அமைதியாக சென்ற சிறுவர்கள் பின்னர் நண்பர்களுடன் வந்து ராஜேஷை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

Exit mobile version