நாளை வானில் நிகழ்கிறது அரிய வகை சூரிய கிரகணம்

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் நிகழ்வுதான் கிரகணம். சூரிய, சந்திர கிரகணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.ஆனால் நாளை வானில் நிகழ இருக்கும் சூரிய கிரகணத்தின் சிறப்பு என்ன..? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

சூரியனைப் பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சூரியனின் ஒளித்தட்டைச் நிலவு மறைத்துவிடுகிறது. இதனைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். சூரியனின் மையப் பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல் தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம். நிலவின் விட்டத்தைப்போல் சூரியனின் விட்டம் 400 மடங்கு பெரியது. தொலைவு காரணமாக நம் கண்களுக்கு சூரியனும் நிலவும் கிட்டத்தட்ட ஒரே அளவுபோல் காட்சியளிக்கின்றன பூமியைவிட்டுத் தொலைவில் இருக்கும் சூரியனை, பூமிக்கு அருகில் இருக்கும் நிலவு மறைத்துவிடுகிறது. இதனால்தான் கிரகணம் ஏற்படுகிறது.

டிசம்பர் 26 நிகழ இருக்கும் கிரகணம் முழு சூரிய கிரகணம் அல்ல. வளைய சூரிய கிரகணம். சூரியனின் ஒளித்தட்டை நிலவு முழுமையாக மறைக்காமல் சற்று தாழ்வாக மையத்தில் மறைப்பதால், சூரிய ஒளி வளையம்போல் (ring of fire) காட்சியளிக்கும். இதுதான் வளைய சூரிய கிரகணம்.சூரிய கிரகணம் ஏற்படும்போது வழக்கமான நாட்களைப் போலவே இருக்கலாம். வானில் ஏற்படும்  கிரகணத்தின்போது தீங்கான எந்தக் கதிர்களும் வெளிவருவதில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பதால், சூரியக் கண்ணாடிகளை வாங்கி, அதன் மூலம் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு மாவட்டங்களில் வளைய சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும். மற்ற இடங்களில் பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். 26-ந் தேதி காலை 8.06 மணிக்குத் தொடங்கும் சூரிய கிரகணம் காலை 11.14 மணிக்கு முடிகிறது. 9.31 முதல் 9.34 வரை வளைய சூரிய கிரகணம் 3 நிமிடங்கள் நீடிக்கிறது. இந்த கிரகணம் மீண்டும் 2031ல் தமிழகத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version