உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை கொலை செய்த தாய்

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை பெற்ற தாயே கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தேனி மாவட்டம் கோம்பை மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கீதா (23) இவர்களது மகன் ஹரிஷ் (4) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முருகன் மற்றும் கீதா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

இதனையடுத்து முருகன் வேறொரு திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். கீதா, உதயகுமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்குப் பிறந்த மகனான ஹரீசை கீதாவின் தந்தையும் அவரது திருமணம் ஆகாத ஒரு சகோதரியும் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கீதா தனது கணவர் உதயகுமாருடன் தனது தந்தை வசிக்கும் வீட்டின் அருகிலேயே குடியேறினார். தனது தாய் தானே என்று பாசத்தோடு கீதாவின் வீட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளான் சிறுவன் ஹரிஷ். இரவிலும் அந்த வீட்டிலேயே தூங்க தொடங்கியதால் உதயகுமார் மற்றும் கீதா இருவருக்கும் அந்த சிறுவன் மிகவும் இடைஞ்சலாக இருந்துள்ளான்.

இந்தச் சிறுவன் இருக்கும்வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்று மகன் ஹரிஷை கொல்ல உதயகுமாரும் கீதாவும் முடிவு செய்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக கீதாவின் சகோதரி புவனேஸ்வரி மற்றும் அவரது கணவர் கார்த்திக்குமார் ஆகியோரையும் சேர்த்துள்ளனர்.

பெற்ற மகனை எப்படி கொலை செய்தார் தெரியுமா தாய் கீதா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அந்த சிறுவனுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து கோம்பை கால்நடை மருத்துவமனைக்கு எதிராக உள்ள மயானத்திற்கு அழைத்து சென்று செங்கலால் சிறுவனின் முகத்தை அடித்துச் சிதைத்துள்ளனர். மேலும் மார்புப் பகுதியில் மிதித்து படுகொலை செய்தனர். கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து நாடகமும் நடத்தியுள்ளார் தாய் கீதா மற்றும் உதயகுமார். மறுநாள் காலை அந்த பகுதிக்கு சென்றவர்கள் சிறுவன் இறந்து கிடந்ததை பார்த்து விட்டு காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

கொலை தொடர்பாக உதயகுமார் மற்றும் தாய் கீதாவிடம் நடத்திய விசாரணையில் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நாடகம் ஆடினார்.

காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கார்த்திக்குமார் அந்த சிறுவனை கையில் பிடித்து அழைத்துச் செல்வது போலவும் இவர்கள் அனைவரும் ஆட்டோவில் சென்று திரும்புவது போன்ற சிசிடிவி காட்சிகள் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதனையடுத்து உதயகுமார்,கீதா,கார்த்திக்குமார், புவனேஸ்வரி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் 4 பேரும் சேர்ந்து சிறுவனை அடித்து கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இவர்கள் நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். உல்லாசத்தை அனுபவிப்பதற்காக 4 வயது சிறுவனை தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version