மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபர் கைது

தேனி மாவட்டம் கோம்பையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கோம்பை, அமுல் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன். இவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மாமியார் முத்தம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்ற அவரை, பல்லவராயன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.

அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் தனது மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மணிகண்டன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version