பெசன்ட்நகர் கடற்கரையில் மாயமான 8 மாத குழந்தை மீட்பு

சென்னை பெசன்ட் நகரில், காணாமல் போன 8 மாத பெண் குழந்தையை, எம்.ஜி.ஆர். நகரில் மீட்ட தனிப்படை காவல்துறையினர், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தைச் சேந்த பாட்ஷா என்ற நரி குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, 8 மாத பெண்குழந்தையை தூக்கிக்கொண்டு சென்னைக்கு வந்தார். பின்னர், பாசி மணி விற்பனை செய்யும் தனது பெற்றோரை  சந்திப்பதற்காக பெசன்ட் நகருக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் இரவு கடற்கரையில் உறங்கிக்கொண்டிருந்தார். விடியற்காலையில், கைக்குழந்தை மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சாஸ்திரிநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தபோது, அதிகாலை நேரத்தில் ஆட்டோவில் வந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் குழந்தையை தூக்கிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் குழந்தையை மீட்டனர். இதுதொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கடத்தப்பட்டு 2 நாட்கள் ஆனதால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. குழந்தை மீட்கப்பட்டதால், பெற்றோர் நிம்மதியடைந்துள்ளனர்.

Exit mobile version