திமுக ஆட்சியை கடுமையாக விமர்சிக்கும் அக்கட்சியின் பெண் உறுப்பினர்

சென்னையில் தனது வீட்டின் கீழ்தளத்தில் பாலியல் தொழில் நடப்பதாகப், திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் புகாரளித்த நிலையில், காவல்துறையினர், அவரையே தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்தப் பெண் புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது…

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் வனிதா. திமுக உறுப்பினரான இவர், தனது வீட்டின் கீழ்த்தளத்தில் இளைஞர்கள் சிலர், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து சாஸ்திரி நகர் காவல்நிலையத்திற்கு புகார் சென்ற நிலையில், காவல்துறையினர் புகாரளித்த பெண்ணையும், அவரது கணவரையும் அழைத்து மிரட்டியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்து திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகனிடம் முறையிட்டதாகவும், ஆனால் அவர்களும் தனது புகாரை காதில் வாங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சி இவ்வளவு மோசமாக இருக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், அக்கட்சிக்கு வாக்களித்ததற்கு சரியான பலனை அனுபவித்து வருவதாகவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.. திமுக ஆட்சியை விமர்சித்து அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதனிடையே நடைபெற்ற சம்பவம் குறித்து நியூஸ் ஜெவுக்கு பேட்டியளித்த அப்பெண், சாஸ்திரி நகர காவல்துறையினர் கண் முன்னே தானும் தன் குடும்பத்தினரும் மிரட்டப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தான் அளித்த புகாரைக் கண்டுகொள்ளாமல், தங்களை மிரட்டும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version