9-ம் வகுப்பு மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கு!

திருச்சி அதவத்தூர் பாளையத்தில், 9-ம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, சில தடயங்கள் கிடைத்துள்ளதாக திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தில், 9-ம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  குறித்து விசாரணை நடத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் தலைமையில், டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் கொண்ட 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக சிறுமியின் பெயரை பச்சை குத்திய இளைஞர் உள்பட 10 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சம்பவ இடத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராமன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி., ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.ஜெயராமன், வழக்கு தொடர்பாக சில தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். விசாரணை சுமுகமாக சென்றுக் கொண்டிருப்பதால் கூடிய விரைவில் குற்றத்திற்கான காரணம் தெரியவருமென அவர் கூறினார்.

Exit mobile version