மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கும் வரலாற்று சிறப்பு மிக்க விழா குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசு தலைவர்கள் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.

பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை ஒட்டி டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Exit mobile version