இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக 75ஆயிரம்கோடி முதலீடு – சுந்தர்பிச்சை அறிவிப்பு!

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சுந்தர் பிச்சையுடன் நடைபெற்ற ஆலோசனை சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் குறித்து உரையாடியதாகத் தெரிவித்தார். கல்வி, பயிற்சி, மின்னணு பரிவர்த்தனை குறித்து மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சுந்தர் பிச்சை கேட்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள், தொழில் முனைவோர்கள், இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் டிஜிட்டல் மயத்துக்கு கூகுள் உதவுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டு முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் பங்கு முதலீடுகள் மூலமாக இது நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

யூ டியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, கூகுள் இந்தியா அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும். இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக கூகுள் நிறுவனம் உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது. பங்கு முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலமாக இந்தியாவில் முதலீடு செய்யப்படும். இந்த முதலீடு மூலம் எதிர்காலத்தில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன்.

Exit mobile version