தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 654ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 709 பேரில் 3 ஆயிரத்து 445 பேர் ஆண்களும், 2 ஆயிரத்து 264 பேர் பெண்களும் ஆவர். தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 59ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 393 பேருக்கும், கடலூரில் 389 பேருக்கும், திருவள்ளூரில் 308 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தேனியில் 297 பேருக்கும், சேலத்தில் 266 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்து 787ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் சதவீதம் 82 புள்ளி 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 121 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 53 ஆயிரத்து 860 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version