முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 55 கிலோ தங்க நகைகள் கொள்ளை

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 55 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் ஹாஜிப்பூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நகை அடகுக் கடையில் நண்பகலில் அடையாளந் தெரியாத வகையில் முகமூடி அணிந்த சிலர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்துள்ளனர். பெட்டகத்தில் உள்ள நகைகள் முழுவதையும் தராவிட்டால் சுட்டுக்கொன்றுவிடுவதாகக் கூறித் துப்பாக்கி முனையில் மேலாளரை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து மேலாளரின் கையாலேயே பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து அதில் இருந்த 55 கிலோ தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கண்காணிப்புக் கேமரா காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version