தமிழ்நாட்டிற்கு ரூ.533 கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 533 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், நோய்த்தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8 ஆயிரத்து 923 கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ஆயிரத்து 441 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவுக்கு 861 கோடியும், பீகாருக்கு 741 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 533 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நிதியின் முதல் தவணையை ஜூன் மாதம் வழங்க வேண்டும் என 15வது நிதிக்குழு பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, முன்கூட்டியே மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.

Exit mobile version