திருப்பூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் 500 பவுன் நகை கொள்ளை

திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 500 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் வழக்கம் போல் காலை பணிக்கு வந்த போது, லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வங்கியிலிருந்து 500 பவுன் நகைகள் மற்றும் 18 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ள கொள்ளையர்கள், ஹார்டு டிஸ்குகளையும் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version