வேலை தேடி சென்னை வந்த 5 மாணவர்கள் கோர விபத்தில் உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், வேலை தேடி சென்னை வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்த நவீன், ராஜஹாரீஸ், அஜய், ராகுல், அரவிந்த் சங்கர் ஆகியோர், தங்களது சொந்த ஊரில் இருந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தனர். அவர்கள் அனைவரும், சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தபோது, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில், அடையாளம் தெரியாத வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த டிரைலர் லாரியில் மோதி, அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டனர். விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version