3 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம்: கொலை செய்ததாக சிறுமியின் தாய் கைது

கோவை அருகே 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுமியின் தாய் ரூபிணி கைது செய்யப்பட்டார்.

சரவணம்பட்டி அருகேயுள்ள கரட்டுமேடு குன்றின் அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமியை, அவரது தாய் ரூபிணியும், கள்ளக்காதலரும் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரூபிணி, பெண்குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கணவர் பால்ராஜை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் தொலைபேசியில் தவறான அழைப்பு மூலம் பழக்கம் ஏற்பட்ட தமிழ்ச்செல்வனுக்கும், ரூபிணிக்கும் நாளடைவில் நெருக்கம் ஏற்படவே, இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்செல்வனின் அழைப்பின்பேரில் இரவு சரவணம்பட்டிக்கு வந்த ரூபிணி, தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து பிஸ்கட்டில் விஷம் வைத்து குழந்தையை கொன்றதாகத் தெரிகிறது. இதையடுத்து காவல்துறையினர் ரூபிணியைக் கைது செய்துள்ளனர். கள்ளக்காதலன் தமிழ்ச்செல்வன் மீது வழக்குப் பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version