வாகனத் தணிக்கையில் 270 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல்

சென்னை ஆதம்பாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் 270 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. அடையாள அட்டைகளை காரில் கொண்டு சென்ற திமுகவை சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மக்களவை தேர்தலையொட்டி, பணப் பட்டுவாடாவை தவிர்க்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், பரிசு பொருட்கள், தங்கம் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் சுரேந்தர் நகர் மேடவாக்கம் சாலையில், இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இன்னோவா காரை சோதனை செய்ததில், அதில் இருந்த ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து 270 வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் இருந்த 7 பேரை பிடித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்டு சென்ற 7 பேரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Exit mobile version