செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் "மார்ஸ் 2020 ரோவர்" – சிறப்பு தொகுப்பு

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழமுடியுமா என்ற ஆராய்ச்சினை உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் மாஸ் ரோவரை அறிமுகப்படுத்தியுள்ளது நாசா.

செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மார்ஸ் – 2020 ரோவரை, நாசா தனது ஆய்வகத்தில் அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்துக்கு, ‘மார்ஸ் 2020 ரோவர்’ விண்கலத்தை, அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த திட்டமிட்டுள்ளது. 2021 பிப்ரவரியில், இந்த விண்கலம், செவ்வாயில் தரையிறங்கும் என கூறப்படுகிறது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான காலநிலை உள்ளதா? என்பதை ஆராய இந்த ரோவர் அனுப்பப்படுகிறது. மேலும் அங்கு ஏற்கனவே உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் உள்ளதா என்பதையும் சோதனை செய்யும்.

தற்போது, லாஸ் ஏஞ்சல்சின் அருகே பசடேனாவில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில் ரோவர் உருவாக்கப்படும் பணி நடந்து வருகிறது. இதில், ஏராளமான விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். மார்ஸ் 2020 ரோவரை அறிமுகப்படுத்தும் விதமாக, ஆய்வகத்தில் அதனை பார்வையிட பத்திரிகையாளர்களுக்கு நாசா அழைப்பு விடுத்தது. பின்னர், உலக மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்தியது.

6 சக்கரங்களை கொண்ட ரோவரில், துல்லியமாக படம் பிடிக்க 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செவ்வாயில் காற்றின் வேகத்தை உணர 2 கருவிகளும், ரசாயன ஆய்விற்கு பயன்படுத்தப்படும் லேசர்களும் உள்ளன. ஒரு நாளைக்கு 180 மீட்டர் தூரத்திற்கு ரோவர் பயணிக்கும். இது, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் ஐந்தாவது அமெரிக்க ரோவர் ஆகும்.

மாஸ் ரோவரை கொண்டு செவ்வாய் கிரக ஆராய்ச்சியை அமெரிக்கா மேற்கொள்ள உள்ள இந்த நிலையில், இந்தியாவும் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Exit mobile version