கோவை முதியவர் கொலைவழக்கு – காரைக்குடியில் இருவர் கைது!

கோவை சிங்காநல்லூரில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காரைக்குடியில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் கிருஷ்ணசாமி அண்மையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காரைக்குடியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, கார் ஒன்று பஞ்சராகி நின்றதை பார்த்த போலீசார், காரில் இருந்த தனியார் விடுதி ரசீதை வைத்து விக்ரம், செல்வபாண்டியன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

குடிபோதையில் இருந்ததால் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், முதியவர் கிருஷ்ணசாமியிடம் அதிக பணம், நகை இருப்பதை அறிந்து நீண்ட நாள் அவரை நோட்டமிட்டதாகவும், பின்னர் வீட்டில் முதியவர் தனியாக இருந்தபோது அவரை தாக்கி, கொலை செய்து நகையை கொள்ளையடித்ததாக விக்ரம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து விக்ரம், செல்வபாண்டியன் ஆகியோர் கோவை சிங்காநல்லூர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Exit mobile version