ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3,711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்செஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.அதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்றைய தகவலின்படி சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இந்தியர்களும் உள்ளனர். அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

‘கப்பலில் உள்ள மேலும் 53 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதா என மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அதில் 39 பேருக்கு வைரஸ் நோய்த்தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 4 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என ஜப்பான் சுகாதார துறை மந்திரி கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version