புதுச்சாவடி 167 ஆம் ஆண்டு பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் 167ஆம் ஆண்டு பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராம ஜெயலிங்கம், கோட்டாட்சியர் ஜோதி ஆகியோர் துவக்கி வைத்தனர். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுகளை விரட்டி பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு பந்தயத்தை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

இதே போன்று, விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை என பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250 காளைகளும், 200  மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் காளை மாடு விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுப்பாளையம், காஞ்சி, காரப்பட்டு, கடலாடி, கீழ்பாலு, வீரலூர் ஆகிய கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் உற்சாகமாக அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.

Exit mobile version