கான்கிரீட் மேற்கூரை விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் கான்கிரீட் மேற்கூரை விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் கல்லூரி சாலையில் மணி என்பவரது பழைய வீட்டை பராமரிக்க கான்கிரீட் தளம் மீது நின்றபடி ஹைட்ராலிக் டிரில்லிங் மெஷின் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக கான்கிரீட் தளம் இடிந்து விழுந்ததில், அப்பணியில் ஈடுபட்டிருந்த வெட்டுக்காட்டுப்புதூரை சேர்ந்த அமீர்கான் என்ற 16 வயது சிறுவன் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அமீர்கானின் உடலை அருகிலிருந்தவர்கள் பொக்லின் இயந்திரத்தின் மூலம் மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை வேலைக்கு அமர்த்திய காண்ட்ராக்டர் கோடீஸ்வரன் என்பவரிடமும், கட்டிட உரிமையாளர் மணி என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version