பாய்மரப்படகு போட்டியில் 138 வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நடந்த பாய்மரப் போட்டியில் 138 வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பிரதாபிராமன் பட்டிணம் மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் பாய்மரப்படகு போட்டி நடைபெறுவது வழக்கம். மீனவர்களின் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அப்பகுதி  மக்களால் தொடர்ந்து 20 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 23 பாய்மரப்படகுகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு படகிற்க்கு 6 நபர்கள் வீதம் 138 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 10 கிலோ மீட்டர் தூரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட இந்த போட்டியை ஏராளமானோர் கரையோரம் திரண்டு, உற்சாகத்தோடு கண்டு களித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Exit mobile version