பொதிகை டிவியில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கை மே 3 ஆம் தேதி நீட்டித்துள்ளதால் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது என்றும் நிச்சயம் நடத்தப்படுமெனவும் பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல்10 நாள்களுக்குள் தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளது. எனவே மாணவ மாணவிகள் தற்போதுள்ள விடுமுறையை பயன்படுத்தி தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தயார் செய்யப்பட்டு தினமும் ஒளிப்பரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களை எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை தொலைக்காட்சியிலும் காலை 10 மணியில் முதல் 11 மணி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Exit mobile version