திருச்சி நிதி நிறுவன அதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகை கொள்ளை

திருச்சி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முருகையன். நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வ கோயிலுக்கு சென்றிருந்தார். இந்தநிலையில், வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகையன், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, மற்றும் 90 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்த நிலையில் பூட்டு உடைக்கப்படாமல் ஜன்னலின் அருகில் வைக்கப்பட்டிருந்தது. தெரிந்த நபர் உதவியுடன் பூட்டை திறந்து கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version