வேறு சாதி ஆணை விரும்பியதால் 18 வயது இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து விசாரணை

வேறு சாதி ஆணை விரும்பினார் என்று கூறி 18 வயது இளம்பெண்ணை பஞ்சாயத்து சார்பில் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பீகாரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் கிராமம் ஒன்றில் உள்ள 18 வயது இளம்பெண் ஒருவர், வேறு சாதி ஆணை விரும்பினார். ஆனால் அவரின் காதலைப் பெற்றோர் எதிர்த்தனர்.இதனால் தான் விரும்பிய நபருடன் இளம்பெண் சென்று விட்டார். அவரைத் தேடிக் கண்டுபிடித்த பெற்றோர், அவரைப் பஞ்சாயத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அப்பெண், கிராமத்தை அவமதித்துவிட்டார் என்று கூறி, பஞ்சாயத்துத் தலைவர்கள் அவரை ஊர்ப்பொதுவில் உள்ள மரத்தில் கட்டிவைத்து அடித்தனர்.

இதுவே அவருக்கு வழங்கப்படும் தண்டனை என்று கூறி மணிக்கணக்கில் நிற்கவைத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய பெண்ணின் தந்தை,”அவள் குற்றவாளி என்பதால் கட்டி வைக்கப்பட்டிருக்கிறாள். அவள் வேறு சாதி ஆணுடன் செல்ல விரும்பினாள்” என்று கூறியுள்ளார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version