பெற்ற மகளையே கொலை செய்ய முயன்ற பெற்றோர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெற்ற மகளையே கொலை செய்ய முயன்ற தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைகுளம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் மற்றும் ரேவதி. தம்பதிகளான இவர்களுக்கு 9 வயதில் சாதனா என்ற மகள் உள்ளார்.

இந்தநிலையில், சாதனா மனவளர்ச்சி குன்றிஇருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் தம்பதியர் இருவரும் நல்லதொரு வேலையில் இருந்து வந்ததாகவும் கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாகவும்,ஆதலால் சிறுமியை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை தாய் தந்தை இருவரும் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகபாளையம் காத்தப்ப சுவாமி கோயில் சென்று பூச்சிகொல்லி மருந்து கொடுத்து ,கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளனர்.

இதனை கண்ட கோயில் நிர்வாகி மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் இருவரையும் எச்சரித்து சிறுமியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த மல்லி காவல்துறையினர் தந்தை முனீஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தாய் ரேவதி சிறுமியுடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..

Exit mobile version