ஜெர்மன் உதவியுடன் மழை நீர் வடிகால் பணி!

சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், பருவமழையை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சி நிதி 2018-ன் கீழ், 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 117 கிலோ மீட்டர் தூரத்துக்கு 347 இணைப்பு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு 130 விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடித்திட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கோவளம் வடிநிலப்பகுதிகளில் குறிப்பாக சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 326 கிலோ மீட்டர் தூரத்துக்கு 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெர்மன் நாட்டு வங்கி உதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அரசின் ஒப்புதலும், ஜெர்மன் நாட்டு நிதியும் கிடைத்தவுடன் இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவசரக்காலங்களில் வெள்ளத்தடுப்பு பணிக்கு தேவைப்படும் மணல் மூட்டைகள் தயார்நிலையில் இருக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஏதுவாக சமுதாயக்கூடங்கள், பள்ளி கட்டிடங்களை தயார்நிலையில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Exit mobile version