ஒருதலை காதலின் சோகம்… பள்ளி மாணவிக்கு கத்தி குத்து…

ஆரணி அருகே பள்ளி மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு தேவனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த தீபிகா, +2 படித்து வருகிறார். இந்நிலையில், படவேடு மங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்ற இளைஞர், தீபிகாவை காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

தீபிகாவும், காதலை ஏற்க மறுத்து வந்த நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கூடம் சென்ற போது, மறைந்திருந்த பசுபதி, கண் இமைக்கும் நேரத்தில், தீபிகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த தீபிகாவை, அருகில் இருந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே தப்பி ஓட முயன்ற பசுபதி, பொதுமக்கள் பிடித்து, சந்தவாசல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து, பசுபதி போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version