ஆட்சிக்கு வர துடிக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் செயலை கண்டித்து தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இலங்கையில் நடைபெற்ற போரில், ஈழத்தமிழர்களை அழிக்க திமுகவும், காங்கிரசும் உதவியதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே உண்மையை போட்டு உடைத்துவிட்டதாக தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்காக உயிரை கொடுக்கவும் தயார் என பேசிய வைகோ, இப்போது என்ன செய்யப் போகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சனையில் வைகோ கபட நாடகம் ஆடுவதாகவும் துணை முதலமைச்சர் குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த இரு கட்சிகளும் இனி ஒருபோதும் தலை தூக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொண்டனாக இருப்பது பெரும் பாக்கியம் என்று குறிப்பிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று உறுதியாக தெரிவித்தார். காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு அணை விவகாரம், போன்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளுக்கு சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்தின் நலனுக்காக மிகப் பெரிய வெற்றியை பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அவர் புகழாரம் சூட்டினார்.

Exit mobile version