அழகு நிலையத்தில் அத்துமீறிய திமுக பிரமுகர் – பெண்ணுக்கு சரமாரி உதை

அழகு நிலையத்தில் அத்துமீறிய திமுக பிரமுகர் பெண்ணை தாக்கிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த சத்யா, பழைய பேருந்து நிலையம் அருகே ‘மயூரி’ என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கும், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், செல்வகுமார் – சத்யா இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 17 ஆம் தேதி அழகு நிலையத்தில், அத்துமீறி நுழைந்த திமுக பிரமுகர் செல்வகுமார், சத்யாவை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார்.

வாய் வார்த்தைகளால் சண்டை போட்டவர், யாரும் எதிர்பார்க்காத நிலையில், திடீரென்று சத்யாவை எட்டி உதைத்து, கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சத்யா, தன்னை விட்டுவிடுமாறு செல்வகுமாரிடம் கெஞ்சி உள்ளார். அருகில் இருந்த அழகு நிலைய பெண்கள் 3 பேரும், சத்யாவை விட்டு விடுமாறு பயந்து பயந்து செல்வகுமாரிடம் கையை பிடித்துக் கெஞ்சி உள்ளனர். ஆனால், செல்வகுமார் எதையும் பொருட்படுத்தாமல், சத்யாவை தாக்குவதிலேயே குறியாக இருந்தார். கிட்டத்தட்ட 10 முறை செல்வகுமார் அந்தப் பெண்ணை எட்டி எட்டி உதைத்துள்ளார். இதனால், சக அழகு நிலைய பெண் ஊழியர்கள், பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து நடுங்கி உள்ளனர். திமுக பிரமுகர் பெண்ணைத் தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

திமுக பிரமுகர் பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கருத்து யுத்தம் நடைபெற்றது. பலரும் திமுகவினருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். ஏற்கனவே, சில மாதங்களுக்கு முன்பு, சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்த திமுக பிரமுகர் யுவராஜ், கடையில் பிரியாணி இல்லை என்று கூறிய, ஓட்டல் ஊழியரைக் கடுமையாக தாக்கினார். யுவராஜ் பாக்ஸர் என்பதால், பாக்சிங் ஸ்டைலில், ஓட்டல் ஊழியரைத் தாக்கிய சம்பவம், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இதேபோல் வெளியானது. அப்போது, திமுகவிற்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பொங்கி எழுந்தார்கள். தற்போது, திமுக பிரமுகர் அழகு நிலையத்தில் அத்துமீறி அதேபோல் தாக்கி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, சத்யா பெரம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக பிரமுகர் செல்வகுமாரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், செல்வகுமார் மீது அத்துமீறி பெண்ணை தாக்கியது, தகாத வார்த்தைகளால் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பெண்ணை மானபங்கப் படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைதான செல்வகுமார், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி மோகனப்பிரியா உத்தரவிட்டார்.

இதனிடையே, அழகு நிலையத்தில் அத்துமீறி நுழைந்து திமுக பிரமுகர் பெண்ணை தாக்கியதற்கு, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தை அடுத்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Exit mobile version