அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையர்கள் கைவரிசை – "சி.சி.டி.வி. முதல்ல வைங்க"

சென்னை மாம்பலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மாம்பலத்தில் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வருபவர் சந்தனகுமார். வெளியில் சென்றவர், வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறிக்கிடந்தன. இருப்பினும், பணமோ, நகையோ கொள்ளையடிக்கப்படவில்லை.

அதே குடியிருப்பில், கீழ்தளத்தில் வசித்து வரும் சுரேஷ் செனாய் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அவரது வீட்டில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து குமரன் நகர் குற்றப்பிரிவு போலீசில் சந்தனகுமார் மற்றும் சுரேஷ் செனாய் ஆகியோர் புகாரளித்தனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளை நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. காவல்துறை பலமுறை வலியுறுத்தியும் குடியிருப்புவாசிகளின் அலட்சியத்தால், கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version