கோலமிட்ட பெண் கொலையில் குற்றவாளி கைது!

நாகை அருகே வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சித்ரா என்பவர், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி, வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தாக்கியதில், சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நான்கு தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

சித்ராவை தாக்கி விட்டு, கொலையாளி தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், சித்ராவை தாக்கி கொலை செய்தது, சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பது தெரியவந்தது. அதையடுத்து, ரியாஸை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், சித்ரா வீட்டின் அருகில் இருந்த பெண்ணுக்கும் ரியாஸுக்கும் இடையே தகாத உறவு இருந்ததும், இதை சித்ரா தட்டி கேட்டதும் தெரியவந்தது. தகாத உறவை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ரியாஸ், சித்ராவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Exit mobile version