சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடி கைது

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..

சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா லிப்ஷா (வயது 42). நுங்கம்பாக்கம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், இன்று காலை அவரது தோழி ரோகிணி என்பவருடன் தேனாம்பேட்டை சி.என். செட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் பிரசன்னா லிப்ஷா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பிரசன்னா லிப்ஷா புகார் அளிக்கவே, புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து சி.என்.செட்டி சாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் சூளைமேடு பகுதியை சேர்ந்த ராஜு (வயது 29) என்பதும், அவரது பின்னால் அமர்ந்து இருந்த இளம்பெண் தாம்பரம் பாரதியார் யூனிவர்சிட்டியில் படித்துவரும் சுவாதி (வயது 20) என்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் ராஜிவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, ராஜூ மீது வடபழனி உள்ளிட்ட சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் ஒரு நபரிடம் 2 செல்போன்களை பறித்துக்கொண்டு ரூபாய் 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும், அவர் தற்போது செல்போன் பறிப்பிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆனது, வேளச்சேரி பீனிக்ஸ் மஹால் அருகே திருடியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.

Exit mobile version