தான் சந்தித்த எந்த ஃபைனலிலும் தோற்காத ரோகித் சர்மா! டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா?

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற இருக்கக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது.

ஒருநாள் போட்டிகள் என்று எடுத்துக்கொண்டல் இந்திய அணிக்கு சமீப உலகக்கோப்பைகளில் சிம்மசொப்பனமாக ஆஸ்திரேலிய அணி இருந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை வெளியேறச் செய்து இருந்தது. 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாண்டிங் தலைமையிலான அன்றைய ஆஸ்திரேலிய அணி, கங்குலி தலைமையிலான இந்திய அணியினைப் பதம் பார்த்தது. இருபது வருடங்களுக்கு பிறகு இந்த இரு அணிகளும் சந்திக்கும் இறுதிப்போட்டி இதுதான். ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை கனவைத் தகர்த்து இந்தியா வெல்லுமா? என்று நாடே எதிர்ப்பார்த்துள்ளது

இத்தகைய எதிர்ப்பார்ப்பினை இந்தியா நிறைவேற்றுமா? கேப்டன் ரோகித் சர்மா தான் பங்கு கொண்ட அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி வாகையினையே சூடியுள்ளார் என்பது இங்கு கூடுதல் தகவல். அவருடைய அதிர்ஷ்டம் இந்த டெஸ்ட் இறுதிப்போட்டியில் பலிக்குமா? என்பது கேள்விக்குறியே. தற்போதைய இந்திய அணியை எடுத்துக்கொண்டால் விராட் கோலி, சுப்மன் கில், சிராஜ் போன்ற வீரர்கள் மட்டுமே நல்ல பார்மில் உள்ளார்கள். மற்ற வீரர்களின் நிலவரம் மிகவும் மோசம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முக்கியமான கட்டங்களில் சோபிக்கத் தவறுகிறார்கள். ஆஸ்திரேலியப் பக்கமாக பார்த்தால் அது ஒரு கடப்பாரை அணியாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என்று அனைத்து தரப்பிலும் வலுவாக உள்ளது. இந்தியாவின் பேட்டிங் நம்பிக்கை என்று பார்த்தால், முன்னர் சொன்னதுபோல விராட் கோலியும், சுப்மன் கில்லும்தான்.

ஆஸ்திரேலிய ஸ்பின்னரான நாதன் லியான், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பவர்கள் உலகின் வெறுக்கத்தக்க மனிதராக கருதப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். இது என்னவோ உண்மைதான் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பரிமாறி வருகிறார்கள்.

Exit mobile version