யானைகள் தாக்குதல் குறித்து அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், கடந்த 17ம் தேதி முதல் தற்போது வரை காட்டு யானைகளின் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக கூறிய அவர், சேதமடைந்த வீடுகளை புனரமைக்க 25 ஆயிரம் ரூபாயும், உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழிகளின் ஆழத்தை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version