விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி நிறுத்தப்படவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன்

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சி முழுமையாக இன்னும் நிறுத்திவிடவில்லை என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்வதற்காக, சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், தற்போது நிலவின் தென் துருவ பகுதியில் இரவு இருப்பதால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாது என்றும் மீண்டும் அந்தப் பகுதியில் பகல் வந்தவுடன் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறு குறித்து ஆராய தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version